செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியுடன் நெதர்லாந்து மன்னர் சந்திப்பு
அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் மற்றும் ராணி மேக்சிமா ஆகியோர் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்தனர்.
புதுடெல்லி:
நெதர்லாந்து மன்னர் வில்லியம் முதல்முறையாக, அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று டெல்லி வந்த மன்னர் வில்லியம் மற்றும் ராணி மேக்சிமாவிற்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இருவரும் டெல்லியில் நடைபெற உள்ள 25வது தொழில்நுட்ப மாநாட்டின் தொடக்க அமர்வில் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிகழ்ச்சியை தவிர மன்னர் வில்லியம், ராணி மேக்சிமா இருவரும் மும்பை மற்றும் கேரளாவிற்கும் செல்ல உள்ளனர்.
மன்னர் வில்லியம் மற்றும் ராணி மேக்சிமா இருவரும் இன்று காலை டெல்லியில் உள்ள ராஜ்காட் பகுதியில் உள்ள காந்தி சமாதிக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்பு ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்தனர். வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரையும் சந்திக்க உள்ளனர்.