செய்திகள்
எம்எஸ் டோனி

கடைசி வீரர் வீட்டிற்குச் சென்றபின்னர்தான் ஓட்டலில் இருந்து கிளம்புவேன்: இதுதான் டோனியின் தலைமை பண்பு

Published On 2021-05-06 18:00 GMT   |   Update On 2021-05-06 18:00 GMT
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய அனைத்து வீரர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்கள் வீடு திரும்புவதில் எம்எஸ் டோனி கவனம் செலுத்தி வருகிறார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஜெட் வேகத்தில் உயர்ந்தாலும், மன அழுத்தத்தில் வீட்டிற்குள்ளே இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறிது நேரம் மகிழ்ச்சியளிக்கும் வகையில் ஐபிஎல் போட்டி நடைபெற்று வந்தது, பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், மறுபக்கம் ஆதரவும் இருந்து வந்தது.

வீரர்களுக்கான ஐபிஎல் பயோ-பபுள் வெடித்து கொரோனா தொற்று வீரர்களையும், சப்போர்ட் ஸ்டாஃப்களையும் தாக்கத் தொடங்கியது. இதனால் ஐபிஎல் போட்டி உடனடியாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது வீரர்கள் அவர்களது வீட்டிற்குச் செல்வதில் கவனம் செலுத்தி வருகிறார்கள். வெளிநாடு வீரர்களை அவர்களுடய சொந்த நாடுகளுக்கு அனுப்ப ஐபிஎல் நிர்வாகம், அணிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் இடம் பிடித்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் சொந்த ஊர் கிளம்பிக் கொண்டிருக்கின்றன. தற்போது கொரோனா உச்சத்தில் இருப்பதால், அதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனைத்து வீரர்களும் சொந்த ஊர் திரும்பிய பின்னர்தான், ஓட்டலில் இருந்து திரும்புவேன் என்று எம்எஸ் டோனி உறுதியாக கூறிவிட்டாராம்.

தல டோனி ஆடும் லெவன் அணிக்கு சிறந்த தலைவனாக இருந்துள்ளார். கிரிக்கெட்டிற்கு வெளியிலும் நல்ல தலைவன் என்பதை இதன்மூலம் நிரூபித்துள்ளார்.
Tags:    

Similar News