உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள் கூட்டம்.

திருவண்ணாமலையில் 20 லட்சம் பக்தர்கள் சித்ரா பவுர்ணமி கிரிவலம் சென்றனர்

Published On 2022-04-17 08:44 GMT   |   Update On 2022-04-17 08:44 GMT
திருவண்ணாமலையில் 20 லட்சம் பக்தர்கள் சித்ரா பவுர்ணமி கிரிவலம் சென்று தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து கடந்த 2 நாட்களாக 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர்.

கடந்த 15-ந் தேதி முதல் பக்தர்கள் வருகை அதிகரித்தது. நகருக்குள் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியவில்லை. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக இருந்தது.

நேற்று பகலில் கோடை வெயில் வறுத்தெடுத்ததால் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர். செருப்பு அணியாமல் பலர் சென்றதால் வெப்பத்தை தாங்க முடியாமல் ஓடி ஓடிச் சென்றனர். 

இதுபற்றி அறிந்த நகராட்சி நிர்வாகம் உடனடியாக தண்ணீர் வாகனங்களை வரவழைத்து கிரிவலப்பாதையில் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாலை 2 மணிக்கு பின்னர்தான் தண்ணீர் விடப்பட்டது. தண்ணீர் விட்டபோதிலும் சிறிது நேரத்திலேயே அவர்கள் உலர்ந்து விட்டது.

பக்தர்கள் நிழல் குடை மற்றும் மரங்களின் நிழலில் இருந்து சற்று இளைப்பாற்றினர். மாலை 4 மணிக்கு பிறகு பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இதனால் நகர எல்லைப் பகுதியிலிருந்து கோவில் அருகில் செல்லும் வகையில் இயக்கப்பட்ட இலவசப் பஸ்கள் நிறுத்தப்பட்டன.

அதன்பின்னர் சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் இறக்கிவிடப்பட்டு அங்கிருந்து நடந்தே சென்றனர். சிலர் ஆட்டோக் களில் சென்றனர். ஆட்டோக் களும் செல்ல தடை ஏற்பட்டதால் அவைகளும் சரிவர இயங்கவில்லை.

இரவு 12.30 மணி முதல் 1.30மணி வரை திடீரென பலத்த மழை பெய்ததால் பக்தர்கள் அவதிப்பட்டனர்.சில பக்தர்கள் கைக் குழந்தை களுடன் வந்திருந்தனர். 

மேலும் வயதானவர்களும் அவதிப்பட்டனர். அதன் பின்னரும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.இவையெல்லாம் கடவுள் சோதனை என்று பக்தர்கள் தாங்கிக்கொண்டு கிரிவலத்தை நிறைவு செய்து தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். 

நேற்று சிறப்பு ரெயில்கள் இயக்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் திருவண்ணாமலை வழியாகச் செல்லும் 2 ரெயில்கள் வரவில்லை என்று பக்தர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News