ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்த தாயார் திருவடி சேவை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்த தாயார் திருவடி சேவை

Published On 2021-10-13 07:04 GMT   |   Update On 2021-10-13 07:04 GMT
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தாயாரின் திருவடிகளை தரிசிக்க முடியும் என்பதால் ஏராளமான பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து தாயார் திருவடியை தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் கடந்த 6-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தாயார் சன்னதி மூலஸ்தானத்தில் இருந்து உற்சவர் ரெங்கநாச்சியார் தினமும் மாலை புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

பெருமாள் கோவில்களில் பெருமாள் மற்றும் தாயாரின் திருவடிகளை தரிசனம் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுவது மரபாக இருந்து வருகிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ரெங்கநாச்சியார் படி தாண்டா பத்தினி என்ற சிறப்பு கொண்டவர். சாதாரண நாட்களில் இவரது பாதங்கள் தெரியாத வகையிலேயே அலங்காரம் செய்யப்படும்.

ஆனால் நவராத்திரி உற்சவத்தின் 7-ம் திருநாள் மட்டும் தாயாரின் பாதங்களை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்படும். இதனால் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே தாயாரின் திருவடியை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். இந்த ஆண்டுக்கான ரெங்கநாச்சியார் திருவடி சேவை தாயார் சன்னதியில் உள்ள கொலு மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இதையொட்டி ரெங்கநாச்சியார் மாலை 4 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைந்தார். கொலு இரவு 7.30 மணிக்கு ஆரம்பித்து இரவு 9.30 மணிக்கு முடிவடைந்தது. அங்கிருந்து இரவு 10.30 மணிக்கு ரெங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

திருவடி சேவையையொட்டி தாயார் சாய்கொண்டை, கிளிமாலை, வைரத்தோடு, கையில் தங்க கிளி,

பவளமாலை, முத்துச்சரம், காலில் தங்க கொலுசு அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தாயாரின் திருவடிகளை தரிசிக்க முடியும் என்பதால் ஏராளமான பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து தாயார் திருவடியை தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News