ஆன்மிகம்
மாட்டுப் பொங்கல் கொண்டாடும் முறை

மாட்டுப் பொங்கல் கொண்டாடும் முறை

Published On 2021-01-15 02:50 GMT   |   Update On 2021-01-15 02:50 GMT
இன்று (வெள்ளிக்கிழமை) மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. நமக்கு உற்ற தோழனாய் இருந்து உன்னத வாழ்விற்கு அடிகோலும் மாடுகளை வணங்கி மகிழ்வோம்.
மாட்டுப்பொங்கல் அன்று காலை சிவாலயங்களுக்குச்சென்று நந்தி வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும். அன்று எல்லாவிதமான மாலைகளையும் சூட்டி (உணவு மாலை, பணமாலை, பூமாலை, சந்தன மாலை, ஏலக்காய் மாலை, வெற்றிலை மாலை, வடைமாலை, பழமாலை போன்றவை அணிவித்து) நந்தியை அலங்கரித்து வைத்திருப்பர். அவரை தரிசிப்பது மிகவும் நல்லது. நந்தி பதிகம் பாடினால் நலம் கிடைக்கும், வளம் சேரும்.

வீட்டுப் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் வைத்துக் கொண்டாட வேண்டும். இன்று (வெள்ளிக்கிழமை) மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் அல்லது காலை 9 மணி முதல் 10 மணிக்குள் பொங்கல் வைத்து, கோ பூஜை செய்து வழிபட உகந்த நேரமாகும். மாடுகளுக்கு கண்டிப்பாக பொங்கல் நைவேத்தியம் வழங்க வேண்டும். இதன் மூலம் லட்சுமி கடாட்சம் பெருகும். அன்றைய தினம் மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து, மாடுகளின் கழுத்தில் பூமாலையும், கரும்பு மாலையும் கட்டி வழிபடுவது நல்லது.

நைவேத்தியத்தில் கொஞ்சத்தை நம் குடும்ப உறுப்பினர்களும் சாப்பிட வேண்டும். அப்பொழுது தான் சலிக்காது உழைத்து வாழும் குணம் நம்மை வந்து சேரும். நமக்கு உற்ற தோழனாய் இருந்து உன்னத வாழ்விற்கு அடிகோலும் மாடுகளை வணங்கி மகிழ்வோம்.

மாடுகளை வீதியில் அழைத்துச் செல்லும்பொழுது மங்கல ஓசை முழங்கவேண்டும். அல்லது சங்கு ஊதி தீப ஆராதனை காட்டவேண்டும். நிறைவாக சூரைத்தேங்காய் உடைத்து திருஷ்டி கழிக்கவேண்டும்.
Tags:    

Similar News