உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு முத்தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம்
பள்ளிகள் தோறும் நேரடியாகச் செல்லும் சுகாதாரத்துறையினர், மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
உடுமலை:
தமிழகத்தில் வழக்கம்போல் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களின் உடல் நலனில் கவனம் செலுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி வழக்கமான நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளை உரிய காலத்தில் மாணவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
தற்போது 5 முதல் 6 வயது வரையுள்ள மாணவர்களுக்கு தொண்டை அடைப்பான், ரணஜன்னி, கக்குவான் இருமல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
உடுமலை கல்வி மாவட்ட அரசு பள்ளிகளில் இதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. பள்ளிகள் தோறும் நேரடியாகச் செல்லும் சுகாதாரத்துறையினர், மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:
குழந்தை பிறந்ததில் இருந்து, 15 வயது வரை உரிய பருவத்தில் அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட வேண்டும். குறிப்பிட்ட வயதை குழந்தைகள் கடந்த பின் தடுப்பூசி போடுவதை பெற்றோர் பலர் தவிர்த்து விடுகின்றனர்.
நோய் எதிர்ப்பு திறன் குறைந்து விடுவதால் தொண்டை அடைப்பான் உட்பட நோய்கள் தாக்குகின்றன. எனவே பள்ளிகளில் 5 முதல் 6 வயது வரையுள்ள மாணவர்களுக்கு டி.பி.டி., எனும் தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி போடப்படுகிறது.
இதேபோல் 10 வயதுடைய மாணவர்களுக்கும் ரண ஜன்னி தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பள்ளியில் இருந்து இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும். நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.