செய்திகள்
நகை கொள்ளை

கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் 130 பவுன் நகை, ரூ.15 லட்சம் கொள்ளை

Published On 2019-11-20 22:04 GMT   |   Update On 2019-11-20 22:04 GMT
துடியலூர் அருகே கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் 130 பவுன் நகை, ரூ.15 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவையை அடுத்த துடியலூர் அருகே உள்ள லூனாநகர் அப்பாஸ் கார்டன் 2-வது வீதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 59), கட்டிட ஒப்பந்ததாரர். இவருடைய மனைவி சசி (50). இவர்களுக்கு பிரவீன்ராஜ் (26) என்ற மகனும், 24 வயதில் மகளும் உள்ளனர். இந்த நிலையில் கனகராஜ் தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்தார்.

நேற்று மதியம் கனகராஜ் தனது குடும்பத்தினருடன் கோவையில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு காரில் சென்றார். பின்னர் கோவிலில் இருந்து வீட்டிற்கு இரவு 7 மணிக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பு கட்டிவைத்திருந்த நாய் மயங்கிய நிலையில் கிடந்தது. மேலும் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டு இருந்தன.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கனகராஜ் வீட்டில் உள்ளே சென்று பார்த்தார். பீரோவில் மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 130 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி மற்றும் ரூ.15 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து துடியலூர் போலீஸ் நிலையத்திற்கு கனகராஜ் தகவல் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
Tags:    

Similar News