செய்திகள்
சரத்குமார்

தென் மாவட்ட கனிமவளங்களை எடுத்து செல்வதை தடுக்காவிட்டால் போராட்டம் - சரத்குமார்

Published On 2021-08-24 07:12 GMT   |   Update On 2021-08-24 07:12 GMT
கேரளாவிற்கு வாகனங்களில் கனிம வளங்களை அனுமதியின்றி கொண்டு செல்லும் நபர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேரளாவில் நடை பெற்றுவரும் விழிஞ்ஞம் சர்வதேச துறைமுக திட்டபணிகளுக்காகவும், தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலை பணிகளுக்காகவும், 500 - 600 டிப்பர் லாரிகளில் தென்மாவட்ட கனிமவளங்களை அனுமதியின்றி தினந்தோறும் எல்லைத்தாண்டி கொண்டு செல்வதாக அறிகிறேன்.

கடந்த 2015-ம் ஆண்டு விழிஞ்ஞம் துறைமுக திட்டத்திற்கு ரூ.7525 கோடி மதிப்பீட்டில் கேரள அரசும், அதானி குழுமமும் ஒப்பந்தம் செய்ததன் அடிப்படையில், திட்டப்பணிகளுக்காக மலைகள் சூழ்ந்த தென் மாவட்ட பகுதிகளிலிருந்து பாறைகளை உடைத்து சட்ட விரோதமாக கேரளாவிற்கு வாகனங்களில் கனிம வளங்களை அனுமதியின்றி கொண்டு செல்லும் நபர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேரள மாநிலத்தின் தேவைக்காக கட்டப்படும் துறைமுகத்திற்கு தென்மாவட்ட கனிம வளங்களை ஏன் பலி கொடுக்க வேண்டும்?

அனுமதியின்றி தானே கனிமவளங்கள் எடுத்து செல்கிறார்கள் என்று தற்போது அலட்சியப்படுத்தினால், வருங்காலத்தில் மலைகளின்றி, வறண்ட, வளமற்ற, நீர் ஆதாரமற்ற பகுதியாக தென் மாவட்டம் உருவாகிவிடும் சூழல் ஏற்படும்.

வாழ்வாதார சுற்றுச் சூழலை அழித்து வளர்ச்சிக்கான விதை போடுவதில் பயனில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாக இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

இல்லையெனில், மக்களை ஒன்றுதிரட்டி வலுவான போராட்டத்தின் மூலம் தென்மாவட்ட கனிம வளங்கள் பறிபோவதை நாங்கள் தடுத்து நிறுத்துவோம் என்பதை எங்கள் கட்சி சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News