செய்திகள்
தற்கொலை

தோகைமலை அருகே திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

Published On 2020-10-28 10:32 GMT   |   Update On 2020-10-28 10:32 GMT
தோகைமலை அருகே திருமணமான 3 மாதத்தில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தோகைமலை:

தோகைமலை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பில்லூர் ஊராட்சி அங்காளம்மன் தெருவை சேர்ந்தவர் கோபி (வயது 25). போர்வெல் தொழிலாளியான இவர் ஆடு, மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவருக்கும், மத்தகிரி ஊராட்சி ஆத்துப்பட்டியை சேர்ந்த முத்துலட்சுமி மகள் ரம்யாவுக்கும்(19) கடந்த 3 மாதத்திற்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று காலை கோபி, ஆடு-மாடுகளை அருகிலிருந்த காட்டிற்கு ஓட்டிச் சென்றார். அப்போது, அவரது செல்போனை தொடர்பு கொண்ட ரம்யா, தனக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியதாக தெரிகிறது. ஆனால், கோபி உடனே வராமல் சற்று நேரத்தில் வருவதாக கூறினாராம். தன்னை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கணவர் வராததால் கோபமடைந்த ரம்யா, வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர், வீடு திரும்பிய கோபி, மனைவி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ரம்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ரம்யாவின் தாய் முத்துலட்சுமி கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News