செய்திகள்
நாகை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை-பணம் திருட்டு
நாகை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை மற்றும் பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
நாகை அருகே சிக்கல் மேலவீதியை சேர்ந்த விஜயகுமார் மனைவி கமலா (வயது50). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மகளுடன் சொந்த ஊரான செம்பியன்மகாதேவிக்கு வீட்டை பூட்டி விட்டு சென்று உள்ளார். பின்னர் நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதை தொடர்ந்து அவர் உள்ளே சென்று பார்த்த போது பிரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் நாகையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து திருட்டு நடந்த வீட்டில் தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு அது மேலவீதி, அய்யனார் குளம், யாதவர் தெரு வழியாக சிக்கல் ரெயில்வே கேட் வரை சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுதொடர்பான புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.