உள்ளூர் செய்திகள்
விபத்து

சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் பலி

Published On 2022-01-20 11:24 GMT   |   Update On 2022-01-20 11:24 GMT
விக்கிரவாண்டி அருகே சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விக்கிரவாண்டி:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த எசாலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மகன் ராஜவேல் (வயது 35).

இவர் விழுப்புரத்திலுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் ராஜவேல் வீடு திரும்பினார்.

இரவு 9.30 மணியளவில் அவரது மனைவி போனில் பேசினார். அப்போது வீடு திரும்புவதாக கூறியுள்ளார். ஆனால், வெகு நேரமாகியும் ராஜவேல் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த மனைவி லலிதா (29) உறவினர்கள் உதவியுடன் தேடினார்.

இந்நிலையில் நேற்று காலை சின்னதச்சூர் அரசு பள்ளி எதிரே சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து அங்கிருந்த சேற்றில் சிக்கி இறந்து கிடந்தார். இது பற்றிய தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராஜவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினார். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். 

இறந்த ராஜவேலுவுக்கு 3 வயதில் ரோகித் என்ற மகன் உள்ளான்.
Tags:    

Similar News