செய்திகள்
புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா- நாராயணசாமி அரசுக்கு பின்னடைவு
புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்ததால், நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு சிக்கல் உருவாகி உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஒருவர் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் நாராயணசாமி தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது என பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் எதிர்க்கட்சிகள் முறையிட்டன. இதையடுத்து அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக நாளை காலை 10 மணிக்கு புதுச்சேரி சட்டசபை சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது.
நியமன எம்எல்ஏக்களை பாஜகவைச் சேர்ந்தவர் என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் பார்த்தால், ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் தலா 14 எம்எல்ஏக்களுடன் சம பலத்தில் இருந்தன. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, நியமன எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. அவ்வாறு செய்யும்பட்சத்தில் அரசுக்கு சிக்கல் இல்லை.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளார். ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான லட்சுமி நாராயணன் சபாநாயகர் சிவக்கொழுந்துவின் வீட்டிற்கு சென்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். இதன்மூலம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 13 ஆக குறைந்துள்ளது. சட்டசபையில் எம்எல்ஏக்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆக குறைந்துள்ளது.