செய்திகள்
நெல்லை மாநகராட்சி பகுதியில் 56 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
நெல்லை மாநகராட்சி பகுதியில் 56 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்கவும், அவற்றை தினசரி கண்காணிக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். ஆய்வுப்பணியை தீவிரப்படுத்தும் பொருட்டு கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் 4 மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 268 சிறு மற்றும் குறு நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 74 கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடைகளில் 56 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடைகளுக்கு ரூ.19 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.