செய்திகள்
சசிகலா விடுதலையில் சிறப்பு சலுகை கிடையாது- கர்நாடக உள்துறை அமைச்சர் தகவல்
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை விடுதலை செய்வதில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட மாட்டாது என அமைச்சர் தெரிவித்தார்.
பெங்களூரு:
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் தண்டனை காலம் அடுத்த ஆண்டு(2021) பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் நன்னடத்தை விதிகள்படி 129 நாட்கள் சலுகை உள்ளதால் சசிகலாவை முன்கூட்டியே சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் சிறைத்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை கர்நாடக சிறைத்துறை தீவிரமாக பரிசீலித்து வருவதால் சசிகலா எப்போது வேண்டுமானாலும் விடுவிக்கப்படலாம் என்று தகவல் வெளியானது.
சலுகைகள் வழங்கப்படலாம் என்ற தகவலை கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை மறுத்துள்ளார். சசிகலாவை விடுதலை செய்வதில் கூடுதல் சலுகைகள், சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது என அமைச்சர் தெரிவித்தார். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், சிறைச்சாலை விதிகளின் அடிப்படையிலும் சசிகலா விடுதலை செய்யப்படுவார் என்றும் அவர் கூறினார்.