செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாளை தி.மு.க. முப்பெரும் விழா- மு.க.ஸ்டாலின் விருது வழங்குகிறார்

Published On 2021-09-14 05:25 GMT   |   Update On 2021-09-14 06:35 GMT
கொரோனா தொற்று பரவல் காரணமாக கலைஞர் அரங்கம் விழா பகுதிக்கு அனைத்து நிர்வாகிகள், தொண்டர்களையும் அனுமதிக்க முடியாத நிலை உள்ளது.
சென்னை:

தி.மு.க. சார்பில் ஆண்டு தோறும் பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17, அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15, தி.மு.க. கழகம் தொடங்கப்பட்ட செப்டம்பர் 17 ஆகிய இந்த 3 முக்கிய நிகழ்வுகளையும் இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான விழா நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது.

தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் ஆகியோர் பெயரில் 5 விருதுகள் வழங்கப்படுகின்றன. பெரியார் விருது மிசா மதிவாணனுக்கும், அண்ணா விருது எல்.மூக்கையாவுக்கும், கலைஞர் விருது கும்மிடிப்பூண்டி வேலுவுக்கும், பாவேந்தர் விருது வாசுகி ரமணனுக்கும், பேராசிரியர் விருது முபாரக்குக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



நாளை மாலை இந்த விருதுகள் வழங்கப்படும் விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள், பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கலைஞர் அரங்கம் விழா பகுதிக்கு அனைத்து நிர்வாகிகள், தொண்டர்களையும் அனுமதிக்க முடியாத நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு முப்பெரும் விழா நிகழ்ச்சிகளை அனைத்து மாவட்டங்களிலும் காணொலி காட்சி வாயிலாக காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாவட்ட தி.மு.க. சார்பிலும் திருமண மண்டபங்கள் மற்றும் அரங்கங்களில் காணொலி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

Tags:    

Similar News