உள்ளூர் செய்திகள்
முக ஸ்டாலின்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு 3,186 போலீசாருக்கு பதக்கம்- மு.க.ஸ்டாலின் உத்தரவு

Published On 2022-01-13 08:52 GMT   |   Update On 2022-01-13 08:52 GMT
பொங்கல் பண்டிகை முன்னிட்டு 3,186 போலீசாருக்கு பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதல்-அமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு, காவல் துறையில் (ஆண்-பெண்) காவலர் நிலை-1, தலைமைக் காவலர், ஹவில்தார் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பணியாளர்களுக்கு “தமிழக முதல்-அமைச்சரின் காவல் பதக்கங்கள்” வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுநர் கம்மியர் மற்றும் தீயணைப்போர் ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் முதல்நிலை வார்டர்கள் (ஆண்-பெண்) மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் (ஆண்-பெண்) நிலைகளில் 60 பேர்களுக்கும் ‘தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்’ வழங்க முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

மேற்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலை வேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400, 2022 பிப்ரவரி 1-ந் தேதி முதல் வழங்கப்படும்.

மேலும், காவல் வானொலி பிரிவு, நாய் படைப்பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஆக மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு ‘தமிழக முதல்-அமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்’ வழங்கப்படுகிறது. இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தகுந்தவாறு ரொக்கத்தொகை வழங்கப்படும்.

இவர்கள் அனைவருக்கும் பிறிதொரு நாளில் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News