செய்திகள்
குப்பையில்லா மாநகராட்சி - பொதுமக்கள் ஒத்துழைக்க கமிஷனர் வேண்டுகோள்
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் தலைமையில் 200 வீடுகளுக்கான குப்பை தொட்டிகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
திருப்பூர்:
'ஜீரோ வேஸ்ட் திருப்பூர்’ முன் முயற்சியின் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் குப்பைகளை பிரிப்பது குறித்த விழிப்புணர்வை அளிப்பதற்காகவும், சேகரிக்கப்பட்ட குப்பைகள் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படுவதை உறுதி செய்யவும் தியாகி பழனிசாமி நகர் மண்டலம் 1, வார்டு 10 மற்றும் 11ல் சுமார் 795 வீடுகளில் ஜீரோ வேஸ்ட் திருப்பூர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து திருப்பூர் காந்தி நகரில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் தலைமையில் 200 வீடுகளுக்கான குப்பை தொட்டிகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கி அந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளில் திருப்பூர் மாநகரை குப்பையில்லாமல் மாற்றுவதன் மூலம் திருப்பூர் மாநகராட்சி 100 சதவீதம் குப்பைகள் இல்லா மாநகராட்சியாக மாறும். எனவே, பொதுமக்கள் அனைவரும் குப்பையில்லா மாநகராட்சியாக மாற்றிட முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.