செய்திகள்
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 32,319 பேருக்கு கொரோனா தடுப்பூசி
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 32 ஆயிரத்து 319 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடந்த 9 மெகா தடுப்பூசி முகாம்களில் 4 லட்சத்து 207 பேர் தடுப்பூசி செலுத்தி பயன் பெற்றனர்.
இந்த நிலையில் 10-வது கட்டமாக நேற்று அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் என மொத்தம் 740 முகாம்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை கொரோனா நோய் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்த முகாம் பணிகளில் 210 மருத்துவர்கள், 430 செவிலியர்கள், 1,600 அங்கன்வாடி பணியாளர்கள், 1400 தன்னார்வலர்கள், 415 பயிற்சி செவிலியர்கள் மற்றும் 265 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 1,400 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் மெகா தடுப்பூசி முகாமில் 32,319 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.