ஆன்மிகம்
கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

வெட்டுடையார் காளியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-03-24 05:41 GMT   |   Update On 2021-03-24 05:41 GMT
கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி வெட்டுடையார் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
காளையார்கோவில் அருகே உள்ள அரியாகுறிச்சி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும்.

அது போல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை வெட்டுடையார் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கொடிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

அதன்பிறகு கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கோவில் அர்ச்சகர்கள் திருக்கொடியை ஏற்றி வைத்தனர். அதன்பிறகு கொடி மரத்துக்கு மகா தீபாராதனை காண்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால், செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து இரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது.

திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலை வெட்டுடையார் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடக்கின்றன. வருகிற 31-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.

Tags:    

Similar News