செய்திகள்
நில அபகரிப்பு புகார்... சுகாதாரத் துறை மந்திரியின் இலாகாவை பறித்த சந்திரசேகர ராவ்
தெலுங்கானாவில் மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதல்வர் சந்திரசேகர ராவுக்கு மாற்றப்பட்டது.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் சுகாதாரத்துறை மந்திரி எட்டாலா ராஜேந்தர் மீது நில அபகரிப்பு புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். அதன்பின்னர் சுகாதாரத்துறை மந்திரி எட்டாலா ராஜேந்தரை மாற்றம் செய்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். அவருக்கு எந்த துறையும் ஒதுக்கப்படவில்லை.
மந்திரி எட்டாலா ராஜேந்தர் வசம் இருந்த துறையை தனக்கு ஒதுக்கும்படி முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். அதனை ஏற்று, மந்திரி எட்டாலா ராஜேந்தர் வசம் இருந்த மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையை முதல்வர் சந்திரசேகர ராவுக்கு மாற்றம் செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, அந்த துறைக்கான பொறுப்பை முதல்வர் ஏற்றுள்ளார்.
தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள மந்திரி எட்டாலா ராஜேந்தர், இது தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக திட்டமிடப்பட்ட சதி என்று கூறினார். மேலும், தன் மீதான நில அபகரிப்பு புகார் குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவரது ஆதரவாளர்கள் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தினர்.