உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தூய்மை இயக்கம்

Published On 2022-01-11 09:23 GMT   |   Update On 2022-01-11 09:23 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தூய்மை இயக்கம் அனைத்து கிராமங்களிலும் மேற்கொள்ளப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பு தூய்மை இயக்கம் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில்  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பு தூய்மை இயக்கம் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஊராட்சிகளுக்கு சொந்தமான கட்டிடங்களை பராமரிப்பதன் மூலம் அவற்றின் பயன்பாட்டு காலம் அதிகமாகிறது. எனவே, வரக்கூடிய பொங்கல் திருநாளையொட்டி அனைவரின் பங்களிப்புடன் ஊரக பகுதியில் ஒரு சிறப்பு இயக்கமாக பல்வேறு தூய்மைப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, 5 ஆண்டுகளுக்கு முன்பு வர்ணம் பூசப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடங்கள், ஒன்றிய அலுவலக கட்டிடங்கள் அனைத்தையும் உள்ளாட்சி அமைப்புகளின் ஒத்துழைப்புடன் மீண்டும் வர்ணம் பூசி புதுப்பொலிவுடன் வைக்க வேண்டும். மாதந்தோறும்  5 மற்றும் 20&ந்தேதிகளில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்ய ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு முன்பு அனைத்து கிராம      ஊராட்சிகளிலும் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் போன்றவற்றை சுத்தம் செய்து பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொசுக்களால் பரவும் நோய்களை முழுவதும் தடுக்கும் வகையில் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சந்துகள், தெருக்கள்,  கிராம சாலைகள், கிராமங்களை ஒட்டிச் செல்லும் நெடுஞ்சாலைகள் ஆகியவற்றிலுள்ள குப்பையை ஊராட்சியிலுள்ள பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியோருடன் இணைந்து ஒருங்கிணைந்த இயக்கமாக செயல்பட்டு முற்றிலுமாக அகற்றி சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.
வடிகால்கள் மற்றும் சாக்கடை செல்லும் வாய்க்கால்களில் அடைப்புகளை நீக்கி, சுத்தப்படுத்தி கொசுமருந்து தெளித்து, டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா போன்ற நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஊராட்சி மன்றக் கட்டிடங்கள், ஊராட்சி ஒன்றிய கட்டிடங்களில் தேவையின்றி   இருக்கும் பழைய பயன்படுத்த இயலாத பொருட்களை முற்றிலும் அகற்றி, அலுவலகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். 
Tags:    

Similar News