உள்ளூர் செய்திகள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

முழு ஊரடங்கு தேவையில்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2022-01-11 07:20 GMT   |   Update On 2022-01-11 07:20 GMT
பொருளாதாரம் மட்டுமின்றி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என்பதில் முதல்-அமைச்சர் உறுதியாக இருக்கிறார் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை திருவான்மியூர் பாலகிருஷ்ணன் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று பரவியது.

இதைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ ஆலோசனை குறித்து கேட்டறிந்தார்.

பாதிக்கப்பட்ட 8 பேருக்கு பல்ஸ் ஆக்சிஜன் மீட்டரை வழங்கினார். பின்னர் அடையாறு மண்டலத்திற்கு மா. சுப்பிரமணியன் சென்றார். அங்குள்ள தொலைபேசி மருத்துவக்குழு மையத்தை பார்வையிட்டார்.

அங்கிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிப்படுத்தப்பட்ட 2 பேரிடம் அவர் மருத்துவ ஆலோசனை குறித்து பேசினார்.

பின்னர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகிறது. தினமும் 2 ஆயிரம் பேர் கூடுதலாக பாதிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்படுபவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 15 மண்டலங்களிலும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. இதற்காக 178 மருத்துவர்கள், தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு பல்ஸ் ஆக்சிஜன் மீட்டர் வழங்கப்படுகிறது. 3 வேளையும் வெப்ப நிலையை அவர்கள் கண்டறிந்து மருத்துவர்களுக்கு தகவல் தர வேண்டும். ஆக்சிஜன் அளவு 92-க்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அடையாறு மண்டலத்தில் 1000 பல்ஸ் ஆக்சி மீட்டர் வழங்கப்படுகிறது. இதே போல அனைத்து மண்டலங்களிலும் தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

தற்போதைய கொரோனா தொற்று பரவலால் ஆக்சிஜன் அளவு பாதிப்போ, தீவிர சிகிச்சை அனுமதியோ தேவையில்லை. மருத்துவர்கள் ஆலோசனை மட்டுமே வழங்கப்படுகிறது.

சென்னையில் தினமும் 6 ஆயிரம் பேருக்கு தொற்று பரவுகிறது. 26 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 21,987 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களை கண்காணிக்க ஒரு டிவிசனுக்கு 5 பேர் வீதம் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மருத்துவ குழுக்கள் 200 செயல்படுகிறது. 3 வகையாக கொரோனா பாதிப்பு நோயாளிகள் பிரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மூச்சு திணறல், நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள், இணை நோய் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகிறார்கள்.

ராஜீவ்காந்தி, கிண்டி, கொரோனா மருத்துவமனையில் தலா 250 பேர் ஒமைக்ரான் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் யாருக்கும் ஆக்சிஜன் வைக்கக்கூடிய நிலையோ, தீவிர சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையோ இல்லை.

சென்னை மட்டுமின்றி எல்லா மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. தற்போது ஒமைக்ரான் எஸ்ஜீன் தொற்று அதிகளவு பரவுகிறது.

பரிசோதனை செய்யக்கூடிய 100 பேரில் 85 பேருக்கு ஒமைக்ரான் எஸ்ஜீன் பாதிப்பு உள்ளது. 15 பேருக்கு டெல்டா வைரஸ் உள்ளது.

ஒமைக்ரான் பரிசோதனை முடிவு வருவதற்குள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணம் அடைந்து விடுகிறார்கள். தற்போது ஒமைக்ரான் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதி இல்லாதவர்கள் கவனிப்பு மையங்களில் அனுமதிக்கப்படுகிறார்கள்.



பூஸ்டர் தடுப்பூசி 4 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு போடப்படுகிறது. ஜனவரி இறுதியில் இது 10 லட்சமாக உயரும். இதுவரை 20 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது.

15-18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு 90 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுடன் இருப்பவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். பொங்கலுக்கு பிறகு முழு ஊரடங்கு கொண்டு வருவதற்கு அவசியமில்லை. முதல்-அமைச்சர் இந்த வி‌ஷயத்தில் மிக கவனமாக உள்ளார்.

பொருளாதாரம் மட்டுமின்றி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என்பதில் முதல்-அமைச்சர் உறுதியாக இருக்கிறார். அதனால் ஊடரங்கு கட்டுப்பாடுகள் குறித்து தீவிரமாக்க ஆலோசனை செய்து முடிவுகளை எடுக்கிறார்.

இதனால் சிறிய அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. மக்களை காப்பதற்கு முதல்-அமைச்சர் 100 சதவீதம் பாடுபட்டு வருகிறார். பொதுமக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றினால் பொது ஊரடங்கை விரிவுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

பொங்கலுக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை. பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் 15-ந்தேதி (சனிக்கிழமை) என்பதால் அந்த வாரம் மெகா தடுப்பூசி முகாமை நடத்தாமல் அடுத்த வாரம் சனிக்கிழமை நடத்தலாமா? என்பது குறித்து ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும்.

பிரதமர் மோடி நாளை (12-ந்தேதி) விருதுநகரில் 11 மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக இருந்தது. ஊரடங்கின் காரணமாக பிரதமர் டெல்லியில் இருந்து காணொலி மூலம் இதனை திறந்து வைக்கிறார்.

நாளை மாலை 4 மணி முதல் 5 மணி வரை இந்த நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. இதில் மத்திய சுகாதார மந்திரி மான்சுக் மாண்டவியா கலந்து கொள்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., அசன் மவுலனா எம்.எல்.ஏ., வட்டார துணை ஆணையர் சிம்ரன்ஜித் ஆகியோர் உடன் இருந்தனர்.


Tags:    

Similar News