செய்திகள்
கைது

மத்தூர் அருகே ரேசன் அரிசி கடத்தல் - 2 பேர் கைது

Published On 2019-11-08 12:36 GMT   |   Update On 2019-11-08 12:36 GMT
மத்தூர் அருகே ரேசன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊத்தங்கரை:

வேலூர் மாவட்டத்தில் இருந்து ரேசன் அரிசியை ஆந்திரா மாநிலத்திற்கு மர்ம நபர்கள் கிருஷ்ணகிரி வழியாக கடத்தி செல்வதாக கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார்.

அவரது உத்தரவை தொடர்ந்து பர்கூர் போலீசார் மாவட்ட எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வந்தனர்.

பர்கூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரியை நோக்கி வேகமாக ஒரு கார் வந்தது. அந்த காரை போலீசார் வழி மறிக்க முயன்றனர். ஆனால், அந்த வண்டி நிற்காமல் சென்று விட்டது.

இதைத்தொடர்ந்து பர்கூர் போலீசார் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் மைக் மூலம் மர்ம நபர்கள் காரில் மர்ம பொருட்களை கடத்தி செல்வதாக உஷார்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையில் போலீசார் பேரிகார்டர் அமைத்து அந்த பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த அதே காரை மத்தூர் போலீசார் பேரிகார்டரை ரோட்டில் நடுவில் வைத்து வழிமறித்தனர். ஆனால் அந்த கார் பேரிகார்டரை இடித்துவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் பேரிகார்டர் அருகே நின்று கொண்டிருந்த செல்வம் என்ற போலீஸ்காரர் மீது பேரிகார்டர் இரும்பு கம்பி விழுந்து தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மத்தூர் போலீசார் அந்த காரை ஜீப்பில் பின்தொடர்ந்து துரத்தி சென்றனர். மேலும் அவர்கள் சாமல்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்து உஷார்படுத்தினர்.

அப்போது சாமல்பட்டி பகுதியில் உள்ள ரெயில் பாலம் அருகே அந்த காரை மத்தூர் போலீசார் மடக்கி பிடித்தனர்.

உடனே போலீசார் வண்டியை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா நகரைச் சேர்ந்த அருண் (வயது 28) என்பதும், அவருடன் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் உடன் வந்ததும் தெரியவந்தது.

மேலும், இவர்கள் 2 பேரும் திருப்பத்தூரில் இருந்து ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதிக்கு ரேசன் அரிசியை காரில் கடத்தி சென்றது தெரியவந்தது.

பிடிபட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து காரையும், அரை டன் ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

பிடிபட்ட 2 பேரும் அடிக்கடி இதேபோன்று திருப்பத்தூரில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு காரில் ரேசன் அரிசி கடத்தி செல்வது வழக்கமாக கொண்டு உள்ளனர் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் யார்?யார்? உள்ளார்கள் என்பதை அறிய 2 பேரையும் மத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரேசன் அரிசி கடத்தி சென்ற காரை போலீசார் சேசிங் செய்து மடக்கி பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News