செய்திகள்
கவுரி மற்றும் மகன் அஸ்வின் - தீக்சிதா

கணவர் குடிபோதைக்கு அடிமையானதால் விரக்தி: 2 குழந்தைகளை கொன்று தாய் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-07-19 02:27 GMT   |   Update On 2021-07-19 02:27 GMT
கணவர் வேலைக்கு செல்லாமல் குடிபோதைக்கு அடிமையானதால் விரக்தியடைந்த பெண், தனது 2 குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை:

சென்னையை அடுத்த திருநின்றவூர் நடுகுத்தகை, திலீபன் நகரை சேர்ந்தவர் ரமேஷ். பெயிண்டரான இவருக்கு திருமணமாகி கவுரி (வயது24) என்ற மனைவியும், தீக்சிதா(வயது3) என்ற மகளும், அஸ்வின் என்ற 1½ வயது மகனும் உள்ளனர். இந்நிலையில் ரமேஷ் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிற்கு அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவி கவுரியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் வீட்டு கட்டிட வேலைக்காக கவுரி வைத்திருந்த சீட்டுப்பணம் ரூ.50 ஆயிரத்தை கேட்டு ரமேஷ் தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது.

அதைத்தொடர்ந்து நேற்று காலை ரமேஷ் தனது மனைவி கவுரியிடம் மது அருந்துவதற்காக பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பின்னர் பணத்தை வாங்கி கொண்டு மது அருந்த வெளியே சென்றுவிட்டார்.

இதனால் மிகுந்த மன விரக்தியடைந்த கவுரி, குடிகார கணவருடன் வாழ்வதைவிட குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு எடுத்தார். இதையடுத்து மாடி வீட்டில் வசித்து வரும் அவர், வீட்டு கதவை பூட்டி உள்தாழ்ப்பாள் போட்டு விட்டு, மேற்கூரையில் இரும்பு குழாயில் தனது மகள் மற்றும் மகன் ஆகிய இருவரையும் தனித்தனியாக புடவையால் தூக்கில் தொங்கவிட்டார்.

குழந்தைகள் துடிதுடித்து உயிரிழந்ததை உறுதி செய்த பின்னர், மற்றொரு புடவையில் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த திருநின்றவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரது உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணையும் நடக்கிறது. மதுவுக்கு அடிமையானதால் மனைவி மற்றும் பால் மணம் மாறாத 2 குழந்தைகளை வாலிபர் பறிகொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News