தேவகோட்டையில் குப்பை கிடங்கில் தீடீர் தீ விபத்து- புகை முட்டத்தால் பொதுமக்கள் அவதி
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம்நகர் பவர்ஹவுஸ் அருகில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது.
நகராட்சியில் சேகரிக்கப்படும் அனைத்து விதமான குப்பைகள் இங்கு கொட்டப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் எப்போதும் துர்நாற்றம் வீசும். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் யாரோ குப்பை கிடங்கில் தீ வைத்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் தீ குப்பைகளில் பரவி மளமளவென எரிந்தது. இதனால் அந்த பகுதியே புகை மூட்டமானது.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தால் ஏற்பட்ட கரும்புகை காரணமாக அப்பகுதியில் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
தூர்நாற்றம், நோய்பரவல் உள்ளிட்ட காரணங்களால் குப்பை கிடங்கை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.