ஆன்மிகம்
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மாசி திருக்கல்யாண விழா 25-ந்தேதி நடக்கிறது

Published On 2021-02-20 08:55 GMT   |   Update On 2021-02-20 08:55 GMT
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மாசி திருக்கல்யாண விழா வருகிற 25-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருக்கல்யாண விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண விழா வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.

இதையொட்டி முருகன் சன்னதி எதிரே திருக்கல்யாணத்திற்கு கால் நாட்டு நிகழ்ச்சி நடந்தது. 25-ந் தேதி காலை 8 மணிக்கு அறம் வளர்த்த நாயகி அம்மனை பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளச் செய்து பறக்கையில் உள்ள காசிவிசுவநாதர் கோவிலில் அம்மனுக்கு திரு நீராட்டு நடக்கிறது.

பின்னர் அம்மனை மண்டபத்தில் எழுந்தருளச் செய்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து பல்லக்கு வாகனத்தில் ஆசிரமம் கிராமத்திற்கு எடுத்து வந்து, ஆசிரமம் சோழன் திட்டை அணைக்கட்டு கரையில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அதன்பிறகு மதியம் திருக்கல்யாண சாப்பாடு நடக்கிறது.

மாலையில் அறம் வளர்த்த நாயகி அம்மனை அலங்கரித்து தந்தப்பல்லக்கில் பூமாலை தோரணம் கட்டி மேளதாளம் முழங்க ஆசிரமம் கிராமத்தில் இருந்து வீதி வழியாக பக்தர்கள் வெற்றிலை, பூமாலை, திருமண பட்டு, மஞ்சள், குங்குமம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் அடங்கிய தாம்பூல தட்டுடன் ஊர்வலமாக தாணுமாலய சாமி கோவிலை வந்தடைகின்றனர்.

அங்கு இரவு 8 மணிக்கு அலங்கார மண்டபத்தில் வைத்து ரிஷப வாகனத்தில் மாப்பிள்ளை கோலத்தில் தாணுமாலயசாமி கரத்தில் திருமாங்கல்யம் வைக்கப்பட்டு, கருடவாகனத்தில் திருமால் வீற்றிருக்க அவரது முன்னிலையில் தாணுமாலய சாமி கையிலுள்ள திருமாங்கல்யம் வேத மந்திரங்கள் முழங்க பெண்கள் குலவை யிட அறம் வளர்த்த நாயகி அம்மன் கழுத்தில் கட்டப்படும்.

திருமணம் முடிந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனம், குங்குமம், வெற்றிலைச் சுருள் ஆகியவை வழங்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து திருமணம் முடிந்த தம்பதிகளான உமாமகேஸ்வரர் மற்றும் திருமால் அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.

மறுநாள் மாலையில் இந்திரன் தேர் என்ற சப்பரத்தில் ரத உற்சவம் நடக்கிறது. இரவு ஆறாட்டு விழாவுடன் திருக்கல்யாண விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News