செய்திகள்
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை - மத்திய அரசு
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கடந்த 3-ம் தேதி ஒரே நாளில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல் அளித்தது.
அதைத்தொடர்ந்து கடந்த 16-ம் தேதி தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். முதல் சுற்றில் 3 கோடி சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனுப்பியுள்ள கடிதத்தில், கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளும் பாதுகானப்பானவை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வதந்திகளை தடுக்க குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.