செய்திகள்
சென்னை ஐகோர்ட்

தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினர்கள் நிபுணர்களாக இருக்க வேண்டும்- ஐகோர்ட்டு கருத்து

Published On 2021-04-16 09:00 GMT   |   Update On 2021-04-16 16:38 GMT
நிபுணராக இல்லாத ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தற்போது நியமிக்கப்பட்டு வருகின்றனர். நிபுணத்துவ உறுப்பினர் என்பவர் நிபுணராக இருக்க வேண்டும் என்றும் கூறினர்.

சென்னை:

தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்கள், நிபுணர்களாக இருக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.

தேசிய பசுமைத் தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தர்ராஜன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

விதிகளின்படி, 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், 3 ஆண்டுகள் 6 மாதங்கள் மட்டுமே அனுபவம் கொண்ட கிரிஜா வைத்திய நாதன் நியமிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்தநிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வரி, சுற்றுச்சூழல், நுகர்வோர் விவகாரங்களில் ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு போதிய நிபுணத்துவம் இல்லை என்பதாலேயே மத்திய அரசு தீர்ப்பாயங்களை உருவாக்கியது என நீதிபதிகள் கூறினர்.

மேலும், நிபுணராக இல்லாத ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தற்போது நியமிக்கப்பட்டு வருகின்றனர். நிபுணத்துவ உறுப்பினர் என்பவர் நிபுணராக இருக்க வேண்டும் என்றும் கூறினர்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல், விதிகளின்படி, சுற்றுச்சூழல் படிப்பில் முதுகலை அல்லது முனைவர் பட்டம் பெற்று, 25 ஆண்டுகள் இத்துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 20 ஆண்டுகால நிர்வாக அனுபவத்தில் 5 ஆண்டுகள் சுற்றுச் சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவம் பெற்று இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலான அரசு நிறுவனங்களின் நிர்வாக கட்டுப்பாட்டை கவனிப்பது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தான் என்று கூறினார்.

பின் வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய கூறி, வழக்கு விசாரணையை 19-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Tags:    

Similar News