செய்திகள்
கோப்பு படம்.

கே.வி.குப்பம் அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2020-11-20 22:06 GMT   |   Update On 2020-11-20 22:06 GMT
கே.வி.குப்பம் அருகே சிறுமி திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கே.வி.குப்பம்:

கே.வி.குப்பம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமிக்கும், லத்தேரி பகுதி கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் நேற்று காலையில் வடுகந்தாங்கல் கிராமத்தில் திருமணம் நடத்த பெற்றோர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக இருதரப்பை சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். 

இந்த நிலையில், திருமண வயதை அடையாத பெண்ணுக்கு திருமணம் நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் குழந்தைகள் திருமண தடுப்பு பிரிவு அதிகாரி மகாலட்சுமி, சமூக நல விரிவாக்க அலுவலர் ராணி, கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அங்கு மணமக்களின் வயது குறித்த ஆவணங்களை சரிபார்த்தனர். அதில் மணப்பெண்ணுக்கு 18 வயது முடிய இன்னும் 4 மாதங்கள் இருப்பது தெரியவந்தது. இதனால் திருமண வயதை அடைவதற்கு முன்பு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்பதை விளக்கி திருமணத்தை உடனடியாக தடுத்து நிறுத்தினர். மேலும் இந்த திருமணத்தை 4 மாதம் கழித்து தான் செய்ய வேண்டும் என்றும், மீறி அதற்குள் திருமணம் செய்தால் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திருமண வீட்டாரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அவர்களை எச்சரித்து அனுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திருமணத்தை ஒட்டி நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
Tags:    

Similar News