செய்திகள்
கோப்புபடம்

திருச்சியில் இருவேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலி

Published On 2020-10-16 07:47 GMT   |   Update On 2020-10-16 07:47 GMT
திருச்சியில் நடந்த இருவேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மலைகோட்டை:

திருச்சி அருகே உள்ள பனையகுறிச்சி சிவன் கோவில் தெருவைசேர்ந்தவர் தங்கமணி (வயது 55). நேற்று முன்தினம் இரவு இவர் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு சரக்கு வாகனம் அவர் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கமணி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு வாகன டிரைவர் செந்தில்நாதனை(30) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி ஒத்தக்கடை புது தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (44). இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு கரூர் பைபாஸ் ரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர்.சிலையிலிருந்து சாஸ்திரி ரோட்டிற்கு செல்லும் சாலையில் ராஜராஜ சோழன் பூங்கா அருகே சென்றபோது, மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த நாகராஜனை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகராஜன் மீது மோதிய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது யார் என தெரியவில்லை.அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News