உள்ளூர் செய்திகள்
கவுந்தப்பாடியில் விவசாயி தவறவிட்ட ரூ.1 லட்சத்து 86 ஆயிரம், ஆவணங்கள் ஒப்படைப்பு
கவுந்தப்பாடியில் விவசாயி தவறவிட்ட பணம், ஆவணங்கள் போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடியில் விவசாயி தவறவிட்ட பணம், ஆவணங்கள் போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த பாண்டி பாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார்(77). விவசாயி. இவர் கவுந்தப்பாடியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் வங்கி கணக்கு வைத்திருந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சிவகுமார் வங்கி கிளைக்கு வந்து நெல் விற்ற பணம் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம், ஒரு லட்சம் ரூபாய்க்கான பத்திரம் மற்றும் அவருடைய ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு போன்றவற்றை ஒரு கருப்பு பேக்கில் வைத்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
ஆண்டிபாளையம் அருகே வந்தபோது பேக் தொலைந்து போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ேபக்கை பல்வேறு இடங்களில் தேடினார்.
இந்நிலையில் அந்த வழியாக கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ஜான்வெஸ்லி என்பவர் வந்துகொண்டிருந்தபோது கீழே கிடந்த கருப்பு பேக்கை எடுத்து பார்த்தார்.
அதில் பணம் ஆவணங்கள் இருந்ததை கண்டு உடனடியாக அந்த பேக்கை கவுந்தபாடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
பேக்கில் இருந்த ஆதார் அட்டை முகவரியை வைத்து இன்ஸ்பெக்டர் சுபாஷ் இது குறித்து சிவகுமாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக சிவகுமார் போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தார். அவரிடம் இன்ஸ்பெக்டர் சுபாஷ் பேக்கை திரும்ப ஒப்படைத்தார். பேக்கை பெற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் சுபாசுக்கும், பேக்கை மீட்டுக்கொடுத்த ஜான் வெஸ்சிக்கும் சிவகுமார் நன்றி தெரிவித்தார்.