செய்திகள்
விபத்து

சுசீந்திரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவன் பலி

Published On 2021-08-01 10:49 GMT   |   Update On 2021-08-01 10:49 GMT
சுசீந்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

மண்டைக்காடு விளாத்தி விளையைச் சேர்ந்தவர் ஜெய்ந்தன்.

இவர், வெள்ளிச்சந்தை அரசு உயர்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஷிபா (வயது 49). இவர்களுக்கு சாமுவேல் ஜெயசாந்த் (23) என்ற மகன் உள்ளார்.

இவர், திருவிதாங்கோடு அருகே உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சாமுவேல் ஜெயசாந்த் கோவில்பட்டியில் நடந்த கோ-ஆப்ரேட்டிவ் தேர்வு எழுதுவதற்கு சென்றார். மாலையில் சாமுவேல் ஜெயசாந்த் வீடு திரும்பினார்.

சுசீந்திரம் அருகே புத்தளத்தில் இருந்து மேல கிருஷ்ணன்புதூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த கார் ஒன்று இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சாமுவேல் ஜெயசாந்த்திற்கு தலை மற்றும் கை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

உடனே அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சாமுவேல் ஜெயசாந்த் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து அவரது தந்தை ஜெய்ந்தன், சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News