செய்திகள்
முழு அரசு மரியாதையுடன் மில்கா சிங் உடல் தகனம்
மில்கா சிங்கின் நினைவாக பாட்டியாலாவில் உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் இருக்கை அமைக்கப்படும் என்று முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்தார்.
சண்டிகர்:
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கொரோனாவுக்கு பிந்தைய உடல்நல பாதிப்புகளால் காலமானார். சண்டிகரில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
மில்கா சிங்கிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்று பஞ்சாப் மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், சிறந்த விளையாட்டு வீரரான மில்கா சிங்கின் நினைவாக பாட்டியாலாவில் உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் இருக்கை அமைக்கப்படும் என்றும் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்தார்.
மில்கா சிங்கின் உடலுக்கு குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவரது மகனும் கோல்ப் வீரருடமான ஜீவ் மில்கா சிங், சிதைக்கு தீ மூட்டினார்.
இதையும் படியுங்கள்: முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா இரங்கல்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு, பஞ்சாப் ஆளுநரும் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியுமான வி.பி.சிங் பத்னோர், அரியானா விளையாட்டுத்துறை மந்திரி சந்தீப் சிங் உள்ளிட்ட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.