மதுரையில் தொழிலாளியிடம் செல்போன் பறித்த வாலிபர்கள் கைது
மதுரை:
மதுரை சிலைமானை சேர்ந்த தொழிலாளி தங்கபாண்டி (38) என்பவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதில், நான் கடந்த 4-ந் தேதி இரவு ஹீரா நகர் பழைய ரெயில்வே கேட் பகுதியில் வந்த போது 2 பேர் என்னிடம் செல்போன், பணத்தை பறித்து விட்டனர் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.
மாநகர தெற்கு துணை கமிஷனர் தங்கதுரை மேற் பார்வையில், திடீர் நகர் உதவி கமிஷனர் ரவீந்திரபிரகாஷ் அறிவுரையின் பேரில், திடீர்நகர் இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லாபாய் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி தொழிலாளியிடம் செல்போனை பறித்த சோலைஅழகுபுரம் ராம மூர்த்தி நகர், கார்த்திகேயன் என்கிற குட்டை கார்த்திக் (19), திடீர்நகர் நல்லமுத்து காலனி சரவணன் என்ற வாய்க்கால் (29) ஆகியோரை கைது செய்தனர்.
ஆனையூர் தமிழ் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கார்த்திக் (40). இவர் நேற்று குட்செட் ரோட்டில் உள்ள மீன் கடைக்கு சென்றார். அங்கிருந்த 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாயை பறித்து சென்றனர்.
இது குறித்து கார்த்திக் கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கூடல்புதூர் வானவில் வீதி பாண்டி மகன் தங்கராமன் (19), உசிலம்பட்டியை அடுத்துள்ள பொட்லுபட்டி செல்வம் (26) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டன.