செய்திகள்
ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு- மேலும் ஒருவரை கைது செய்தது சிபிசிஐடி
ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். #ChildSaleRacket #RasipuramChildSale
சேலம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக, விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன் மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டு, விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் அமுதவள்ளி மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், புரோக்கர் அருள்சாமி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குழந்தைகள் விற்பனை தொடர்பாக, மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் சாந்தியை இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் விவரங்கள் குறித்த மாவட்ட சுகாதாரத்துறையின் அறிக்கை சிபிசிஐடியிடம் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்த உள்ளனர். #ChildSaleRacket #RasipuramChildSale