ஆன்மிகம்
குதிரை வாகனத்தில் விநாயகரும், சந்திரசேகரரும் வீதியுலா வந்ததை படத்தில் காணலாம்.

குதிரை வாகனங்களில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலா

Published On 2019-12-09 05:15 GMT   |   Update On 2019-12-09 05:15 GMT
கார்த்திகை தீபத்திருவிழாவின் 8-வது நாளில் குதிரை வாகனங்களில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலா நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் 7-வது நாளான நேற்று முன்தினம் விநாயகர், முருகர், அருணாசலேஸ்வரர்- உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் பக்தர்கள் வெள்ளத்தில் நடந்தது.

இதில் பராசக்தி அம்மன் தேரை பெண்கள் மட்டுமே பரவசத்துடன் இழுத்து வழிபட்டனர்.

8-வது நாளான நேற்று பகல் சுமார் 12 மணியளவில் குதிரை வாகனங்களில் விநாயகரும், சந்திரசேகரரும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க விநாயகரும், அதன்பின்னே சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சாமி வீதி உலாவின் போது மாட வீதிகளில் பக்தர்கள் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். முன்னதாக தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சந்திரசேகரர், அருணாசலேஸ்வரர் தேர் முன்பாக நின்று நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது. அப்போது சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை நடந்தது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏராளமான மக்கள் கட்டணம் மற்றும் பொது தரிசன வழியில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.



தொடர்ந்து மாலை சுமார் 4.30 மணியளவில் தங்கமேருவில் பிச்சாண்டவர் உற்சவம் நடந்தது. மாடவீதியில் பிச்சாண்டவர் உலா வந்தபோது திரளான பொதுமக்கள், வியாபாரிகள் உண்டியலில் காணிக்கை செலுத்தினர். பிச்சாண்டவர் உற்சவத்தின்போது உண்டியலில் காணிக்கை செலுத்தினால் வியாபாரம் விருத்தியாகி செல்வம் பெருகும் என்பது ஐதீகம். பிச்சாண்டவர் மாட வீதியில் உள்ள காந்தி சிலை அருகில் வந்ததும் வாணவேடிக்கை நடைபெற்றது.

கோவிலுக்கு பிச்சாண்டவர் சென்ற பின்னர் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், அருணாசலேஸ்வரர், உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் குதிரை வாகனத்தில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபத்திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக காடா துணிகள் மாடவீதியை சுற்றி கொண்டு வரப்பட்டு கோவிலில் பூஜை நடைபெற்றது. மகா தீபத்திருவிழாவிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News