ஆன்மிகம்
முண்டகக்கண்ணி அம்மன் கோவில்

பழம்பெருமையும், பல்வேறு சிறப்புக்களையும் கொண்ட முண்டகக்கண்ணி அம்மன் கோவில்

Published On 2019-12-24 01:19 GMT   |   Update On 2019-12-24 01:19 GMT
மயிலாப்பூருக்கு மட்டுமல்ல சென்னை மாநகருக்கே இன்று அருள்புரியும் ஆதி சக்தியாக முண்டகக்கண்ணியம்மன் திகழ்ந்து கொண்டிருக்கிறாள்.
சென்னை மாநகரின் இதயப் பகுதியாகத் திகழும் மயிலாப்பூருக்கு எத்தனையோ சிறப்பம்சங்கள் உள்ளன. மயிலையில் அம்மன் என்றதும் மறுவினாடி முண்டகக்கண்ணி அம்மன் தான் நம் மனக்கண் முன் வந்து நிற்பாள். மயிலாப்பூருக்கு மட்டுமல்ல சென்னை மாநகருக்கே இன்று அருள்புரியும் ஆதி சக்தியாக முண்டகக்கண்ணியம்மன் திகழ்ந்து கொண்டிருக்கிறாள். சென்னையில் உள்ள பழமையான பல ஆலயங்களுடன் ஒப்பிடுகையில் முண்டகக்கண்ணி அம்மன் அதைவிட பழம்பெருமையும், பல்வேறு சிறப்புக்களையும் கொண்டிருப்பது தெரியவரும்.

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் இருக்கும் பகுதி ஒரு குளமாக இருந்தது. அந்த குளக்கரையில் பல நூறு ஆண்டு வயதுடைய மிகப்பெரிய ஆலமரம் இருந்தது. குளத்துக்கு வரும் மக்கள் அந்த ஆலமரத்தடியில் அமர்ந்து செல்வது வழக்கம்.

ஒரு நாள் அந்த ஆலமரத்தடியில் அந்த ஊர் பகுதி மக்கள் அமர்ந்து இருந்தபோது அம்மன் தன்னை சுயம்புவாக வெளிப்படுத்தி இருப்பதை கண்டனர். அவர்களில் ஒருவர் மீது அருள் வந்து அம்மன் தன்னை வெளிப்படுத்தி இருப்பதை தெரிவித்தாள். ஒரு தாமரை மொட்டு எப்படி இருக்குமோ, அப்படி அந்த சுயம்பு வடிவம் இருந்தது. கிராமமக்கள் அந்த சுயம்பு அம்மனை தங்களின் காவல் தெய்வமாக கருதினார்கள். எனவே அந்த ஆல மரத்தடியில் குடிசை ஒன்று அமைத்து அம்மனை வழிபடத் தொடங்கினார்கள்.

அந்த அம்மனுக்கு ஒரு பெயர் வைக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்தபோது கிராமத்தில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு பெயரை கூறினார்கள். ஊரின் எல்லையில் இருப்பதால் எல்லை அம்மன் என்று பெயர் வைக்கலாம் என்று நினைத்தனர். அப்போது தாமரைக்குளக்கரையில் தோன்றியதாலும், தாமரை மொட்டு வடிவத்திலேயே தன்னை அம்மன் சுயம்புவாக வெளிப்படுத்திக் கொண்டதாலும் தாமரை என்ற தமிழ்ச் சொல்லுக்குரிய முண்டகம் என்பதை கொண்டு தொடங்க அம்மனை சேர்த்து முண்டகக்கண்ணி அம்மன் என்ற பெயர் வைக்கலாம் என்ற கருத்து எழுந்தது. அம்பிகையின் விருப்பமும் அதுவாகவே இருந்தது. இதனால் அந்த அம்மன் முண்டகக்கண்ணி அம்மன் என்று அழைக்கப்பட்டாள்.

லஸ்சில் இருந்து சாந்தோம் செல்லும் அந்த சாலையில் சென்றால் இடதுபுறம் பெரிய ஆர்ச் நம்மை வரவேற்கும். அந்த வழியில் சென்றால் அது கோவில் அருகில் நம்மை கொண்டு போய் சேர்த்துவிடும். முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் மிக, மிக சிறிய கோவில். கிழக்குதிசை நோக்கிய இத்தலத்தில் பெரிய பெரிய பிரகாரங்களோ, பிரமாண்ட கோபுரங்களோ, விமானங்களோ இல்லை. சாலையோரத்தில் உள்ள இத்தலத்தின் ராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. அந்த கோபுரத்தில் மகிஷாசுரமர்த்தினி, ராஜராஜேஸ்வரியின் சுதை வடிவங்கள் எழில்மிகு சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

கோபுர தரிசனம் செய்து விட்டு உள்ளே நுழைந்தால் இடது பக்கம் 2 பெரிய அரச மரங்கள் நிற்பதை காணலாம். அதன் கீழ் விநாயகரும், நாகர் சிலைகளும் உள்ளன. விநாயகரை வணங்கி முண்டகக் கண்ணியம்மனை வழிபட செல்லலாம். அம்மன் ஓலைக்குடிசையில் இருக்கிறாள். அவளை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வசதிக்காக மகா மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மகாமண்டபத்தில் வரிசையில் நின்று முண்டகக்கண்ணி தாயை பொறுமையாக, கண்குளிர கண்டு நன்றாக தரிசனம் செய்யலாம். காலையில் சென்றால் அபிஷேகத்தையும் மாலையில் சென்றால் அலங்காரத்தையும் பார்க்கலாம்.

வேப்பிலை பாவாடை உடுத்தி, வெள்ளி கைபொருத்தி, சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மனை தரிசிக்கும் போது மனதுக்கு நிறைவாக இருக்கும். சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளின் ஒரே அம்சமாக முண்டகக்கண்ணி அம்மன் திகழ்வதாக தல வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாந்த சொரூபியான இந்த அன்னை நாம் கேட்பதை எல்லாம் அருள்பவள். அவளிடம் மனம் உருக வேண்டினால் அவள் நிச்சயம் கைவிட மாட்டாள்.

முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்தை 044-24981893 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பெறலாம்.

Tags:    

Similar News