ஆன்மிகம்
இயேசு

கடவுள் அமைத்துக் கொடுத்த வாழ்க்கை

Published On 2020-09-29 06:47 GMT   |   Update On 2020-09-29 06:47 GMT
தனக்காகக் கடவுள் நிச்சயித்த பெண்ணை கண்டுகொண்ட சந்தோஷம் ஈசாக்கை நிறைத்தது. ஈசாக்கும் ரெபெக்காளும் திருமண பந்தத்தில் இணைந்தனர்.
நதித் தீரத்தின் தெற்குப்பகுதியில் இருந்த சோதோம் நகரில் குடியேறி வாழ்ந்து வந்தார், ஆபிரகாமின் அண்ணன் மகனாகிய லோத்து. சோதோம் நகரின் அருகிலேயே கொமோரா நகரமும் இருந்தது. இந்த இரு நகரங்களிலும் சிலைகளை வணங்கி வந்த மக்கள், பாலியல் குற்றங்கள் உட்பட பெரும் பாவங்களைச் செய்து மிக இழிவான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இதனால் பரலோகத் தந்தையாகிய யகோவா, லோத்துவையும் அவனது குடும்பத்தாரையும் சோதோம் நகரிலிருந்து வெளியேறச் செய்துவிட்டு, அந்த நகரங்களை முற்றாக அழித்தார்.

கானான் நாட்டில் வசித்துவந்த ஆபிரகாம் தனது சகோதரனாகிய லோத்து, சாவிலிருந்து தப்பித்துக்கொண்டதை அறிந்து நிம்மதியடைந்தார். ஆனால் ‘கானான் நகரமும் கடவுளின் சாபத்துக்கு ஆளாகுமோ?’ என்று அஞ்சினார். இதனால் தனது மகன் ஈசாக்கு, ‘எக்காரணம் கொண்டும் கானான் பெண்ணொருத்தியை மணந்துகொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் ஆபிரகாம். எனவே தனது மந்தைகளையும் சொத்துக்களையும் நிர்வகித்துவந்த தனது மூத்த வேலைக்காரரை அழைத்தார். அவரிடம் “எனது தந்தையின் தேசமும் தற்போது எமது உறவினர்கள் வசித்துவரும் நகரமுமாகிய ஆரானுக்குச் சென்று, என் மகனுக்குப் பொருத்தமான மணமகளைத் தேடி அழைத்து வாருங்கள்” என்று அனுப்பினார்.

வேலைக்காரரும் அவரது விருப்பத்தை ஏற்று அதிகாலையில் புறப்பட்டார். நீண்ட பயணத்துக்குப் பின்பு ஆரான் நகரின் எல்லையை அடைந்தார். அது மாலை நேரம். அந்த இடத்தில் ஒரு சமுதாயக் கிணறு இருந்தது. தங்கள் வீட்டுத்தேவையான குடிநீரை சேகரித்துச் செல்ல மாலை நேரத்தில் இளம்பெண்கள் கிணற்றடிக்கு வருவது சமூக மரபாக இருந்தது. எனவே இந்தக் கிணற்றுக்கு நீர் எடுத்துச் செல்லவரும் ஆரான் நகரின் பெண்களில் ஒருத்தியை ஈசாக்கிற்கும் மணமகளாகத் தேர்ந்தெடுக்க தனக்கு வழிகாட்டும்படி கடவுளாகிய யகோவாவிடம் அந்த வேலைக்காரர் பிரார்த்தனை செய்தார். அவரது பிரார்த்தனையை கடவுள் கேட்டார்.

வேலைக்காரர் எதிர்பார்த்ததைப் போலவே ஒரு இளம்பெண் தண்ணீர் எடுக்க வந்தாள். முழுமையான முக்காடிட்டு, அடக்கமே வடிவாக, அழகின் மொத்த உருவமாக கையில் தண்ணீர் குடுவை ஏந்தி அங்கே வந்த அந்தப் பெண்ணின் பெயர் ரெபெக்கா. வேலைக்காரர் அந்நிய தேசத்தின் ஆண்மகனாக இருந்தும் தன் எதிரில் நின்றுகொண்டிருந்த காரணத்தால் அவருக்கு வணக்கம் சொன்னாள். அவளது பணிவில் குளிர்ந்த வேலைக்காரர் “பெண்னே.. எனக்குக் குடிக்க கொஞ்சம் தண்ணீர் தருவாயா?” என்றார். உடனடியாக கிணற்றிலிருந்து அவருக்குத் தண்ணீர் எடுத்துக்கொடுத்தாள்.

ஆனால் வேலைக்காரர் கேட்காமலேயே நீண்டதூரம் பயணித்துக் களைப்படைந்திருந்த அவரது ஒட்டகத்தை கண்டு, அது குடிக்கக் குடிக்க தண்ணீரை இறைத்து சளைக்காமல் ஊற்றிக் கொண்டே இருந்தாள். விலங்குகளுக்கும் இரங்கிய அவளிடம் “பெண்ணே.. உனது தந்தையின் பெயரென்ன?” என்று கேட்டார் வேலைக்காரர். மேலும் “இன்றிரவு உங்கள் வீட்டில் தங்கிச் செல்ல எனக்கும் எனது ஒட்டகங்களுக்கும் இடமிருக்கிறதா?” என்று கேட்டார்.

அவள் மறுப்பேதும் கூறாமல் “என் தந்தையின் பெயர் பெத்துவேல். எனக்கொரு சகோதரர் இருக்கிறார். அவரது பெயர் லாபான். எங்கள் வீட்டில் போதுமான இடமிருக்கிறது. தாராளமாக எங்கள் வீட்டில் நீங்கள் தங்கிச் செல்லலாம்” என்றாள். ஆபிரகாமின் அண்ணன் நாகோரின் மகன்தான் பெத்துவேல். இது தலைமை வேலைக்காரருக்கு நன்கு தெரிந்திருந்தது. இவ்வாறு ஆபிரகாமின் உறவினர் வீட்டுக்கே தன்னை வழிநடத்திச்சென்ற கடவுளாகிய யகோவாவுக்கு அவன் மண்டியிட்டு நன்றி சொன்னார்.

அன்றிரவு பெத்துவேலின் இல்லத்தில் தங்கி அவர்களது விருந்தோம்பலை ஏற்றுக்கொண்டார் ஆபிரகாமின் தலைமை வேலைக்காரர். தாம் ஈசாக்கிற்கு மணமகள் தேடி வந்த காரணத்தையும், கடவுள் எவ்வாறு ரெபெக்காளை அடையாளம் காட்டினார் என்பது பற்றியும் எடுத்துக் கூறினார்.

இது கடவுளின் ஏற்பாடு என்பதை அறிந்த பெத்துவேலும், அவரது மகனும் ஈசாக்கிற்கு ரெபெக்காளை திருமணம் செய்துவைக்க சம்மதித்தார்கள். ரெபெக்காவும் சம்மதம் தெரிவித்தாள். மறுநாளே ரெபெக்காளை ஒட்டகத்தில் ஏற்றிக்கொண்டு கானான் தேசத்துக்குப் புறப்பட்டார் ஆபிரகாமின் வேலைக்காரர்.

அவர்கள் கானான் தேசத்தின் எல்லைக்குள் இருந்த வயல்வெளியில் பிரவேசித்தபோது, ஈசாக்கை நேருக்கு நேராய்ச் சந்தித்தாள் ரொபெக்கா. இதனால் இருவரது மனதுக்குள்ளும் மகிழ்ச்சி பொங்கியது.

தனக்காகக் கடவுள் நிச்சயித்த பெண்ணை கண்டுகொண்ட சந்தோஷம் ஈசாக்கை நிறைத்தது. ஈசாக்கும் ரெபெக்காளும் திருமண பந்தத்தில் இணைந்தனர். கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அந்தத் தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்கு ‘ஏசா’ என்றும், ‘யாக்கோபு’ என்றும் பெயரிட்டனர்.
Tags:    

Similar News