ஆன்மிகம்
வேதநாராயணப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

வேதநாராயணப்பெருமாள் கோவிலில் 6-ந்தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு

Published On 2020-01-01 06:21 GMT   |   Update On 2020-01-01 06:21 GMT
தொட்டியம் அருகே திருநாராயணபுரம் வேதநாராயணப்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு வருகிற 6-ந் தேதி அதிகாலை திறக்கப்படுகிறது.
தொட்டியம் அருகே உள்ள திருநாராயணபுரத்தில் சிறப்பு வாய்ந்த வேதநாராயணப்பெருமாள் கோவில் உள்ளது. வைணவ தலங்களில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான இங்கு வேதநாராயணப்பெருமாள் நான்கு வேதங்களையும் தலையணையாக கொண்டு பிரம்மாவிற்கு வேத உபதேசம் செய்து லட்சுமிதேவி, பூமாதேவியுடன் காட்சியளிக்கிறார். மேலும், அரயருக்கு மோட்சம் தந்த ஸ்தலம் என பல சிறப்புகளைப்பெற்ற இந்த கோவிலில், ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பாக நடைபெறும்.

அதன்படி, இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 27-ந்் தேதி தொடங்கியது. பகல் பத்து, ராப்பத்து என்று 21 நாள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் வேதநாராயணப்பெருமாள் ஒவ்வொரு வாகனத்தில் புறப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 4.15 மணிமுதல் 5 மணிக்குள் நடக்கிறது. பின்னர் எம்பெருமான் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

அதை தொடர்ந்து திருக்கைத்தலசேவை, திருமங்கை ஆழ்வார் வேடுபரி, சாற்று முறை ஸ்ரீநம்மாழ்வார் திருவடி தொழுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் விஜயராணி, கோவில் நிர்வாக அதிகாரி நாகையா மற்றும் கோவில் பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News