ஆன்மிகம்
கும்பகோணம் மகாமக குளத்தை படத்தில் காணலாம்.

மகாமக குளம் பூட்டப்பட்டிருப்பதால் புனித நீராட அனுமதி வழங்கப்படுமா?

Published On 2020-11-03 06:00 GMT   |   Update On 2020-11-03 06:00 GMT
கும்பகோணம் மகாமக குளம் பூட்டப்பட்டிருப்பதால் வெளியூர் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். குளத்தை திறந்து புனித நீராட அனுமதி வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மகாமக குளம் உள்ளது. புராதன சிறப்பு மிக்க மகாமக குளத்தின் மொத்த பரப்பு 6.2 ஏக்கர். கும்பகோணம் நகருக்கு அழகு சேர்க்கும் வகையில் அமைந்துள்ள இந்த குளத்தை சுற்றி 16 வகையான தானங்களை வலியுறுத்தும் வகையில் 16 கோவில்கள் காணப்படுகிறது. குளத்துக்குள் அமைந்துள்ள 21 தீர்த்த கிணறுகள் புனித தன்மை வாய்ந்தவையாகும்.

இந்த கிணறுகள் சிவனுடைய பெயரையோ அல்லது இந்திய நதிகளின் பெயரையோ கொண்டுள்ளன. ஆண்டுதோறும் மாசி மக திருவிழாவின்போது மகாமக குளத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமக திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவார்கள்.

கும்பகோணத்தில் ஆன்மிக சுற்றுலா மேற்கொள்ளும் பக்தர்கள் தவறாமல் மகாமக குளத்துக்கு வந்து புனித நீராடி செல்கிறார்கள். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக மகாமக குளம் பூட்டப்பட்டது.

தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கும்பகோணத்துக்கு வெளியூர்களை சேர்ந்த பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இந்த நிலையில் மகாமக குளம் பூட்டப்பட்டிருப்பதால் பக்தர்கள் பலர் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பும் நிலை உள்ளது. எனவே மகாமக குளத்தை திறந்து புனித நீராட அனுமதி வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர்.
Tags:    

Similar News