செய்திகள்
திருப்பூரில் சிறுவனை கடித்து குதறிய தெருநாய்கள்
திருப்பூர் மாநகர் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் - தாராபுரம் சாலை தெற்குதோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி, பஞ்சு விற்பனை செய்யும் இடைத்தரகராக உள்ளார். இவரது 6 வயது மகன் பிரகதீஸ் 3-ம்வகுப்பு படித்து வருகிறான்.
சம்பவத்தன்று பிரகதீஸ் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த சுமார் 5-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பிரகதீசை கடித்து குதறியவாறே இழுத்து சென்றது.
இதனை கண்ட பொதுமக்கள் தெருநாய்களை விரட்டியடித்து சிறுவனை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பிரகதீசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:
திருப்பூர் மாநகர் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. தெருவில் விளையாடும் சிறுவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் என அனைவரையும் துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக வெள்ளியங்காடு, குப்பாண்டம்பாளையம், கோவில்வழி உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லையானது அதிகரித்து காணப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றனர்.