செய்திகள்
சம்பா சாகுபடிக்கு தேவையான அளவு உரம், விதைகள் இருப்பு உள்ளது - வேளாண் அதிகாரிகள் தகவல்
நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டத்தில் காரீப் பருவம் முடிவடைந்த நிலையில் பயிறு வகை பயிறுகள் மற்றும் நிலக்கடலை போன்ற எண்ணை வித்து பயிர்கள் அறுவடை நடந்து வருகிறது. தற்போது தொடங்க உள்ள ராபி பருவ பயிர் சாகுபடி மாவட்டத்தில் 1.80 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல், சோளம், மக்காச்சோளம் மற்றும் உளுந்து போன்ற பயிறுவகை பயிர்கள் மற்றும் நிலக்கடலை போன்ற எண்ணை வித்து பயிர்களும் மானாவாரி மற்றும் இறவை சாகுபடியாக பயிரிடப்படுகிறது.
சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்களின் விதைகள் போதிய அளவு இருப்பு உள்ளது. அதன்படி நெல் 74 டன், சிறுதானிய பயிறுகள் 81 டன், பயறு வகை பயிறுகள் 28 டன் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகள் 15 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
அமராவதி அணையில் இருந்து சம்பா பருவத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவில் நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான அளவு இருப்பில் உள்ளது.
யூரியா 1,927 டன், டி.ஏ.பி., 1,584 டன், காம்ப்ளக்ஸ் 4, 910 டன், சூப்பர் பாஸ்பேட் 742 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தரமான விதை மற்றும் தேவையான அளவு உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதை வட்டார வேளாண் அதிகாரிகள் கண்காணிக்கவும், கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உரக்கடைகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இவ்வாறு வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.