செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட பெண் வக்கீல்.

தக்கலை அருகே கொட்டும் மழையில் கணவர் வீட்டுமுன் பெண் வக்கீல் ‘திடீர்’ போராட்டம்

Published On 2021-07-23 10:33 GMT   |   Update On 2021-07-23 10:33 GMT
தக்கலை அருகே கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி பெண் வக்கீல் கொட்டும் மழையில் வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
குழித்துறை:

குழித்துறையை அடுத்த திருத்துவபுரத்தை சேர்ந்தவர் வக்கீல் பிரியதர்ஷினி(வயது28). இவருக்கும், தக்கலையை அடுத்த முளகுமூடு பகுதியை சேர்ந்த கல்லூரி உதவி பேராசிரியர் ஒருவருக்கும் 9-1-2020 அன்று திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு கணவர் வீட்டார் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக பிரியதர்ஷினி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், கணவன்- மனைவி இருவரையும் தனியாக வீடு எடுத்து வாழ அறிவுரை கூறினார். அதன்படி நாகர்கோவிலில் இருவரும் குடியேறினர்.

இந்நிலையில் பிரியதர்ஷினியின் கணவர், அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனை அறிந்த பிரியதர்ஷினி கணவர் வீட்டிற்கு சென்றார். அங்கு அவர்கள் பிரியதர்ஷினியை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து வக்கீல் பிரியதர்ஷினி கணவரின் வீட்டின் முன் சாலையில் அமர்ந்து கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுபற்றி தகவலறிந்த தக்கலை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பிரியதர்ஷினி தனது கணவருடன் சேர்த்து வைக்குமாறு கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News