தேனி மாவட்டத்தில் கனமழை- பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து
கூடலூர்:
தேனி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதியிலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இதேபோல வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் 2 அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கோடை காலத்தில் மழை பெய்து வருவதாலும் அணைகளுக்கு நீர்வரத்து வருவதாலும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெரியாறு அணையின் நீர்மட்டம் 126.90 அடி. வரத்து 775 கன அடி. திறப்பு 150 கன அடி. இருப்பு 4028 மி.கன அடி. வைகை அணையின் நீர்மட்டம் 61.61 அடி. வரத்து 14 கன அடி. திறப்பு 72 கன அடி. இருப்பு 3918 மி. கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42.60 அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.50 அடியில் உள்ளது. அணைக்கு வரும் 141 கன அடியில் 35 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், மீதி உள்ள தண்ணீர் உபரியாகவும் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 100.44 மி.கன அடியாக உள்ளது.
பெரியாறு 38.8, தேக்கடி 23.2, கூடலூர் 3.6, சண்முகாநதி அணை 6.8, உத்தமபாளையம் 47.4, வீரபாண்டி 16, சோத்துப்பாறை 8, கொடைக்கானல் 4.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.