செய்திகள்
கோப்புப்படம்

புகுஷிமா அணு உலை கழிவு நீரை கடலில் திறந்துவிட ஜப்பான் முடிவு

Published On 2021-04-13 19:04 GMT   |   Update On 2021-04-13 19:04 GMT
ஜப்பானை 2011-ம் ஆண்டு தாக்கிய சுனாமியால் உருக்குலைந்து போன புகுஷிமா அணு உலையின் கழிவு நீரை கடலில் திறந்து விட அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
டோக்கியோ:

ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி ரிக்டர் அளவுகோலில் 9.0 புள்ளிகள் அளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு சுனாமி தாக்கியது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.‌

மேலும் உலகிலேயே பாதுகாப்பான அணு உலையாகக் கருதப்பட்ட புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலைக்குள் கடல்நீர் புகுந்தது.

மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்ததால் உலைகளை குளிர்விக்க மின்சாரம் இல்லாமல் போனது. இதனால் 6 யூனிட்களில்3 யூனிட்கள்சேதம் அடைந்தன. இதனால்சுற்றியுள்ள பகுதிகளில் கதிர்வீச்சு தாக்கியது.

1986-ம் ஆண்டு ரஷியாவில் ஏற்பட்டசெர்னோபில் அணு உலை விபத்தை தொடர்ந்து உலகிலேயே 2-வது மிகப்பெரிய அணுஉலை விபத்தாக வரலாற்றில் இது பதிவானது.

10 ஆண்டுகள் கடந்தும் மக்கள் வசிக்க முடியாத அளவிற்குகதிர்வீச்சின் தாக்கத்தை இன்னமும் கக்கி கொண்டிருக்கிறது அந்த உலை.

இதனிடையே புகுஷிமா அணு உலையில் உள்ள அணு கழிவுகளை பாதுகாப்பாக அகற்றிவிட்டு அந்த அணுஉலையை முழுமையாக செயலிழக்கச் செய்யும் பணிகளில் டெப்கோ என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

அந்தவகையில் புகுஷிமா அணு உலையில் அணு கழிவுகள் நிறைந்த சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் டன் கழிவு நீர் முற்றிலுமாக சுத்திகரிக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொட்டிகளில் பாதுகாப்பாக சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அணு கழிவுகள் அகற்றப்பட்ட இந்த கழிவு நீரை கடலில் திறந்து விட ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் யோஷிஹைட் சுகா தலைமையில் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது. 2022-ம் ஆண்டுக்குள் அணு உலையின் கழிவு நீரை கடலில் விடும் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து யோஷிஹைட் சுகா கூறுகையில், “அணுக்கழிவுகளை கடலில் வெளியேற்றுவது இன்றிமையாத பணி. இது ஓரிரு நாளில் முடியக்கூடியது அல்ல. பல ஆண்டுகள் பணி. அப்போதுதான் புகுஷிமா அணு உலையை முழுமையாக செயலிழக்கச் செய்ய முடியும். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பின்னரே கழிவுநீரை அப்புறப்படுத்தும் பணி தொடங்கும்” என கூறினார்.

இதனிடையே அணு உலையின் கழிவு நீரை கடலில் திறந்துவிடும் ஜப்பான் அரசின் முடிவுக்கு சர்வதேச அணுசக்தி முகமை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதேபோல் ஜப்பானின் இந்த முடிவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கடைபிடித்து ஜப்பான் இந்த பணிகளை மேற்கொள்ளும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அதேசமயம் ஜப்பான் அரசின் இந்த முடிவுக்கு சீனா கடும் எதிர்ப்புஉள்ளூர் மீனவர்களும், அந்த நாட்டின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அணு உலையின் கழிவு நீரை கடலில் கலந்தால் அது கடல் வளத்தை முற்றிலுமாக அழிக்க வாய்ப்புள்ளது என்றும் மேலும் அது மனித மரபணுவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கிரீன்பீஸ் என்கிற சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரித்துள்ளது.

அதேபோல் சீனா மற்றும் தென்கொரியா ஆகிய இரு நாடுகளும் ஜப்பான் அரசின் இந்த முடிவை கடுமையாக எதிர்த்துள்ளன.

இந்த முடிவு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று எனவும், எனவே இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் ஜப்பானைப் அந்த இரு நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.
Tags:    

Similar News