செய்திகள்
குமாரசாமி, டி.கே.சிவக்குமார்

எங்கள் கட்சியை சேர்ந்த சிலரை இழுக்க டி.கே.சிவக்குமார் முயற்சி: குமாரசாமி

Published On 2020-10-17 02:20 GMT   |   Update On 2020-10-17 02:20 GMT
டி.கே.சிவக்குமாரால் எனக்கு எந்த ஆதங்கமும் இல்லை. அவருக்கு இந்த தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று குமாரசாமி கூறியுள்ளார்.
பெங்களூரு :

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், ஜனதா தளம் (எஸ்) கட்சி சமாதியாகிவிடும் என்று எங்கள் கட்சி நிர்வாகிகள் சிலரிடம் கூறியுள்ளார். இத்தனை நாட்களாக சித்தராமையா எங்கள் கட்சியை சமாதியாக்கியது முடிந்துவிட்டது. இப்போது அவருடன் டி.கே.சிவக்குமார் சேர்ந்துள்ளார். எங்கள் கட்சியை சேர்ந்த சிலரை இழுக்க அவர் முயற்சி மேற்கொண்டுள்ளார். இது அவரால் சாத்தியமில்லை. எனது அரசியல் வாழ்க்கையில் டி.கே.சிவக்குமாருக்கு எதிராக நான் அரசியல் செய்துள்ளேன்.

எங்கள் கட்சியில் உள்ள ஒக்கலிகர் சிலரை காங்கிரசுக்கு இழுக்க டி.கே.சிவக்குமார் முயற்சி செய்கிறார். ஒக்கலிகர் சமூகத்தின் வளர்ச்சியில் அவரது பங்கு என்ன என்பதை சொல்ல வேண்டும். அவர் அழைத்த உடனேயே எங்கள் கட்சியினர் காங்கிரசுக்கு செல்ல மாட்டார்கள். அந்த அளவுக்கு மோசமானவர்கள் எங்கள் கட்சியில் இல்லை. டி.கே.சிவக்குமாரால் எனக்கு எந்த ஆதங்கமும் இல்லை. அவருக்கு இந்த தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Tags:    

Similar News