ஆன்மிகம்
வடபழனி முருகன் கோவில்

பிரசித்தி பெற்ற சென்னை ஆலயங்கள்

Published On 2021-11-06 06:07 GMT   |   Update On 2021-11-06 06:07 GMT
சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள மேலும் சில முக்கியமான கோவில்களைப் பற்றி சிறிய குறிப்பாக இங்கே பார்ப்போம்.
சென்னை நகரைச்சுற்றி ஏராளமான பிரசித்திபெற்ற திருக்கோவில்கள் அமைந்துள்ளன. வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பலருக்கும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் உள்ளிட்டவைதான் அதிகமாகத் தெரிந்திருக்கும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள மேலும் சில முக்கியமான கோவில்களைப் பற்றி சிறிய குறிப்பாக இங்கே பார்ப்போம்.

காளிகாம்பாள் கோவில்: சென்னை மாநரகத்தின் பரபரப்பு மிகுந்த பகுதியான பாரீஸ் கார்னரில், தம்புசெட்டி தெருவில் இந்த ஆலயம் உள்ளது. கி.பி.17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை கடற்கரையை ஒட்டிய பகுதியில் இருந்த இந்தக் கோவில், பல்வேறு கால மாற்றங் களின் காரணமாக, தற்போதைய இடத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது. போர்ச்சுகீசியர்களின் ஆதிக்க காலத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்கிறார்கள். இந்தக் கோவிலில் ‘காளி’ என்றும், ‘காமாட்சி’ என்றும் அழைக்கப்படும் பெண் தெய்வம் பிரதான மூலவராக அருளாட்சி செய்கிறார். முன்காலத்தில் உக்கிர காளியாக காட்சியளித்த இத்தல மூலவர், தற்போது சாந்தமான கோலத்தில் காமாட்சி வடிவில் அருள்வதாக ஐதீகம்.

திருநீா்மலை ரங்கநாதர்: தென் சென்னைப் பகுதியில் உள்ள குரோம்பேட்டையில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, திருநீர்மலை. பல்லாவரத்தில் இருந்தும் 5 கிலோமீட்டர் சென்றால், இந்த ஊரை அடையலாம். திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த ஆலயம், மலைக் குன்றின் மீது அமைந்திருக்கிறது. மலையின் அடிவாரத்திலும் சிறிய கோவில் உள்ளது. இங்கு நீர்வண்ணப்பெருமாள் வீற்றிருக்கிறார். மலையின் மீதுள்ள ஆலயத்தில் ரங்க நாதர் அருளாட்சி செய்கிறார். கோவிலுக்கு எதிரே ஒரு தீர்த்தக்குளம் அமைந்துள்ளது.

மருந்தீஸ்வரர் கோவில்: சென்னை, திருவான்மியூர் பகுதியில் அமைந்திருக்கிறது இந்தத் திருக்கோவில். இங்கு மூலவராக சிவபெருமான் வீற்றிருக்கிறார். நோய்களை தீர்க்கும் சக்தி படைத்தவர் என்பதால், இவருக்கு ‘மருந்தீஸ்வரர்’ என்று பெயர். அதோடு, அகத்திய முனிவருக்கு, தெய்வீக மருந்து முறைகளை உபதேசம் செய்ததாலும், இவருக்கு இப்பெயர் வந்தது. தேவாரப் பாடல்கள் பெற்ற 274 திருக்கோவில்களில் இந்த ஆலயமும் ஒன்று. இந்தக் கோவில் அமைந்த சாலை, அந்த காலத்தில் சோழ நாட்டை, பல்லவ நாட்டோடும், ஆந்திராவில் ஆட்சி செய்த சில ராஜ்ஜியங்களோடும் இணைக்கும் முக்கிய சாலையாக விளங்கியதாக சொல்லப்படுகிறது.

ஜெகந்நாதர் கோவில்: சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் இருந்து விலகி, ரெட்டிக்குப்பம் சாலையில் கானாத்தூர் என்ற இடத்தில் இந்தக் கோவில் இருக்கிறது. ஒடிசாவில் உள்ள பூரிஜெகந்நாதர் கோவிலை போன்ற வடிவமைப்பிலேயே இந்தக் கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. பூரி ஜெகந்நாதர் கோவிலில் உள்ளதுபோலவே, இங்கும் ஜெகந்நாதர், பலராமர் மற்றும் சுபத்ரா தேவி ஆகியோரை தரிசிக்க முடியும். தெய்வங்களின் சிலைகளும், பூரியில் உள்ளது போலவே மரத்தால் செய்யப்பட்டவைதான். இதற்காக வேப்ப மரத் துண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரதான தெய்வங்களைத் தவிர யோக நரசிம்மர், விநாயகர், விமலாதேவி மற்றும் கஜலட்சுமி ஆகியோருக்கும் சன்னிதிகள் அமைந்துள்ளன. இந்த ஆலயம் வெண் சலவைக் கற்களாலும், கருப்புப் பளிங்கு கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. பளிங்கு கருங்கல் காஞ்சிபுரத்தில் இருந்தும், வெள்ளை சலவைக் கல் ராஜஸ்தானில் இருந்தும் வரவழைக்கப்பட்டுள்ளன.

தேவி கருமாரியம்மன்: சென்னை புறநகர் பகுதியில் மேற்கு பக்கத்தில் உள்ளது திருவேற்காடு கருமாரியம்மன் கோவில். புராண காலத்தில் இந்தப் பகுதியில் மருத்துவக் குணம் மிகுந்த மூலிகை வனம் இருந்ததாக சொல்லப்படுகிறது. தெய்வீக மூலிகை (வேர்) நிறைந்த வனம் என்பதால், இந்த பகுதி ‘திருவேற்காடு’ என்று பெயர் பெற்றதாக கூறுகிறார்கள். இந்த ஆலய அம்மன், குறி சொல்லும் பெண் வேடத்தில் சூரிய பகவானை பார்க்க அவரது இருப்பிடம் சென்றாள். ஆனால் அன்னையை அடையாளம் கண்டுகொள்ளாத சூரியபகவான், அவளுக்கு உரிய மரியாதை தராததோடு, அவமரியாதையும் செய்தான். இதையடுத்து சூரியனின் இடத்தில் இருந்து அன்னை புறப்பட்ட மறுநொடி, சூரியன் தன்னுடைய ஒளியை இழந்தான். இதனால் உலக உயிர்களும் துன்பத்தில் துவண்டன. தன் தவறை உணர்ந்த சூரியன், அன்னையிடம் மன்னிப்பு கோரினான் என்று தல வரலாறு சொல்கிறது. இதனால் சூரிய பகவானுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமையில் இந்த ஆலயத்தில் அருளும் கருமாரியம்மனுக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்படு கின்றன.

சுப்பிரமணியர் ஆலயம்: சென்னையை அடுத்துள்ளது, பழமையும் பெருமையும் வாய்ந்த குன்றத்தூர். பல்லாவரத்தில் இருந்து மேற்கே 8 கிலோமீட்டர் தொலைவில்இந்த ஊர் இருக்கிறது. இங்குள்ள முருகன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். சிறிய குன்றின் மீது அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் உள்ள மூலவர், வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்கிறார். இந்த ஆலயம், இரண்டாம் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பெரிய புராணம் என்னும் 63 நாயன்மார்களின் வரலாற்றை எழுதிய சேக்கிழார் அவதரித்த தலமாக குன்றத்தூர் குறிப்பிடப்படுகிறது.
Tags:    

Similar News