செய்திகள்
ஜடேஜா

கடைசி பந்து வரை திக் திக் திக்... கொல்கத்தாவை வீழ்த்தி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது சி.எஸ்.கே.

Published On 2021-09-26 14:01 GMT   |   Update On 2021-09-26 14:24 GMT
ரெய்னா, டோனி, அம்பதி ராயுடு என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப ஜடேஜா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி த்ரில் ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டின் 38-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் மோர்கன் டாஸ் வென்று  பேட்டிங் தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெய்ன் பிராவோ இடம் பெறவில்லை. அதற்குப் பதிலாக சுட்டிப்பையன் சாம் கர்ரன் இடம் பிடித்துள்ளார்.  கொல்கத்தா அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

கொல்கத்தா அணியின் ராகுல் திரிபாதி 33 பந்தில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்தி அதிரடியாக விளையாடி 11 பந்தில் 26 ரன்கள் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது. நிதிஷ் ராணா 27 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷர்துல் தாகூர், ஹசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க் வாட், டு பிளிஸ்சிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்தில் 40 ரன்களும், டு பிளிஸ்சிஸ் 30 பந்தில் 43 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தா்ர.

அடுத்து வந்த மொயீன் அலி 28 பந்தில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த அம்பதி ராயுடு 10 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா 11 ரன்னிலும், டோனி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.

கடைசி 2 ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை பிரதித் கிருஷ்ணா வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் அடிக்கப்பட்டது. 3-வது மற்றும் 4-வது பந்தை இமாலய சிக்சருக்கு தூக்கினார் ஜடேஜா. அதோடு மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் 22 ரன்கள் கிடைக்க சென்னை அணிக்கு கடைசி ஓவரில் 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

கடைசி ஓவரை சுனில் நரைன் வீசினார். முதல் பந்தில் சாம் கர்ரன் ஆட்டமிழந்தார். 2-வது பந்தில் ஷர்துல் தாகூர் ரன் அடிக்கவில்லை. ஆனால் 3-வது பந்தில் ஷர்துல் தாகூர் 3 ரன் எடுத்தார். இதனால் கடைசி இரண்டு பந்தில் 1 ரன் தேவைப்பட்டது. 5-வது பந்தை சந்தித்த ஜடேஜா அவுட் ஆனார்.



இதனால் கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. தீபக் சாஹர் களம் இறங்கினார். கடைசி பந்தில் கொல்கத்தா அணி ரன் அடிக்கவிடாமல் தடுத்துவிட்டால் போட்டி ‘டை’யில் முடிந்து சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சாஹர் ஒரு ரன் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 10 போட்டிகளில் 8-ல் வெற்றி புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்ததுடன் பிளே-ஆப் சுற்று வாய்ப்பையும் உறுதி செய்தது.
Tags:    

Similar News