செய்திகள்
திருத்துறைப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெயிண்டர் பலி
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மனைவி கண்முன்னே பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருத்துறைப்பூண்டி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வெட்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் முஜாதீன் (வயது 35), பெயிண்டர். இந்த நிலையில் நேற்று இரவு முஜாதீன், மற்றும் அவரது மனைவி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த பிரகாஷ் என்பவர், முஜாதீன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த முஜாதீன், மனைவி கண்முன்பே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்தில் காயம் அடைந்த முஜாதீன் மனைவி மற்றும் பிரகாஷ் ஆகியோர் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து பற்றி திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.