செய்திகள்

ஷேர் ஆட்டோக்கள் மோதி கவிழ்ந்ததில் கல்லூரி மாணவி கை முறிந்தது - 2 ஆட்டோ டிரைவர்கள் கைது

Published On 2019-02-13 07:48 GMT   |   Update On 2019-02-13 07:48 GMT
இரண்டு ஷேர் ஆட்டோக்கள் மோதி கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவி கை முறிந்தது குறித்து 2 ஆட்டோ டிரைவர்களை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் அடுத்த கீழம்பி பகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு காஞ்சீபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவியர்கள் படித்து வருகின்றனர்.

நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் மாணவிகள் சிலர் காஞ்சீபுரம் பஸ் நிலையம் செல்வதற்காக ஷேர் ஆட்டோவில் ஏறினர். அப்போது பின்னர் வந்த மற்றொரு ஷேர் ஆட்டோ அடுத்த இடத்தில் பயணிகளை ஏற்றவதற்காக முந்தி சென்றது.

இதையடுத்து 2 ஷேர் ஆட்டோக்களும் போட்டி போட்டு முந்தி சென்றனர். இதில் கட்டுப்பாட்டை இழந்த ஷேர் ஆட்டோக்கள் ஒன்றோடு ஒன்று மோதியது. இதில் ஒரு ஷேர் ஆட்டோ சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இதில் கல்லூரி மாணவிகளான வாலாஜாபாத்தை சேர்ந்த பொன்னி, அரப்பாக்கத்தை சேர்ந்த சாலினி ஆகிய 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் பொன்னியின் வலது கை முறிந்தது. மேலும் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த 13 பேரும் காயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்த பொன்னிக்கு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சாலினி காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இது தொடர்பாக ஷேர் ஆட்டோ டிரைவர்கள் 2 பேரை போலீசார் கைதுசெய்தனர். #tamilnews
Tags:    

Similar News